இஸ்தான்புல் ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய துருக்கி அதிபர்..!!
ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை தனது அறிவுரையால் துருக்கி அதிபர் காப்பாற்றிய சம்பவம் அந்நாட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வலம் வருகின்றது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய நாடுகளை ஆசிய நாடுகளுடன் இணைக்கும் புகழ்பெற்ற போஸ்பரஸ் ஆற்றுப்பாலம் உள்ளது. நீர்மட்டத்தில் இருந்து சுமார் 211 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் தற்கொலை செய்து கொள்ளும் துருக்கியர்களின் உகந்த தேர்வாகவும் விளங்கி வருகின்றது.
நேற்று இந்தப் பாலத்தின் நடுவே தனது காரை நிறுத்திய சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், பாலத்தின் விளிம்பில் ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதைக்கண்ட சில போலீசார் அவரை கீழே இறங்கி வருமாறு சுமார் இரண்டு மணிநேரம் வாக்குவாதம் செய்தும் தனது தற்கொலை முடிவில் இருந்து அவர் பின்வாங்க தயாராக இல்லை.
நொந்துப்போன போலீசார் கையை பிசைந்தபடி நின்றிருந்தபோது அவ்வழியாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது பாதுகாவலர்களுடன் காரில் வந்தார். பாலத்தின் விளிம்பில் நின்றபடி போலீசாருடன் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதை பார்த்த அவர், தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினார்.
உடன்வந்த பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து அந்த வாலிபரை தன்னிடம் கூட்டிவருமாறு எர்டோகன் உத்தரவிட்டார். இதையடுத்து, விரைந்துசென்ற அதிகாரிகள், ‘உங்களை அதிபர் அழைக்கிறார்’ என அவரிடம் தெரிவித்தனர். அவர் சற்று யோசிக்க தொடங்கியபோது, அவரை மேலே இருந்து கீழே இறக்கிய அதிகாரிகள், அதிபரிடம் அழைத்துச் சென்றனர்.
அரசியல் எதிரிகளையும் கவர்ந்திழுக்கும் தனது பேச்சாற்றலை பயன்படுத்தி, வாழ்க்கையின் தோல்விகளுக்கு தற்கொலை தீர்வாகிவிட முடியாது. துன்பங்களை எதிர்த்துநின்று போராடும் மனஉறுதியால் எந்த கஷ்டத்தையும் வென்று விடலாம் என அந்த வாலிபருக்கு அவர் எடுத்துரைத்தார். சில நிமிடங்களில் தனது தற்கொலை முடிவை மாற்றிக்கொண்ட அந்த வாலிபரும் இனி நான் தற்கொலைக்கு முயல மாட்டேன் என அதிபருக்கு வாக்குறுதி அளித்தவராக அவரது கரங்களைப்பற்றி முத்தமிட்டபடி அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவம் துருக்கி நாட்டு ஊடகங்களின் இன்றைய தலைப்பு செய்தியாக வலம் வந்துகொண்டுள்ளது.
Average Rating