மது விற்ற வாலிபர் கைது
திருவான்மியூர் அருகே செம்மஞ்சேரியில் பெட்டிக்கடையில் அதிகவிலைக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மாறுவேடத்தில் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செம்மஞ்சேரி டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி மாறுவேடத்தில் சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒருவர் மது குடித்துவிட்டு தள்ளாடியபடி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது பக்கத்திலுள்ள பெட்டிக்கடையில் மது விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 100 டாஸ்மாக் கடை மது பாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 28) என்ற வாலிபரை கைது செய்தனர். டாஸ்மாக் கடை இரவில் மூடும்போது அங்கிருந்து சுமார் 100 பாட்டில்களை வாங்கி வைத்து, அதிகாலை வேளை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு மது கேட்டு வருபவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்றுவந்ததாக விசாரணையின் போது போலீசாரிடம் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.