துபாயில் தவிக்கும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள்
துபாயில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கைகளில் பணம் இல்லாததால் சாலைகளில் பிச்சை எடுத்து வருகின்றனர். துபாயில் சமீபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோர் பொதுமன்னிப்பின் மூலம் எவ்வித அபராதமும் இன்றி தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அமீரக அரசு அனுமதி அளித்தது. ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்ட பல நாட்டவர்கள் இந்த பொது மன்னிப்பு மூலம் நாடு திரும்பி வருகின்றனர். எனினும் ஒரு சிலர் தங்களுக்கு விமான டிக்கெட் வாங்க வழியின்றி தங்களது நாடுகளுக்கு செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். இப்படி 100க்கும் மேற்பட்டோர் துபாயில் உள்ள கிராஸி பகுதியில் உள்ள அல்சீப் ரோட்டில் தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி தவித்து வரும் இவர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் அவர்கள் நாடு திரும்ப தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். சாலையோரத்தில் இருக்கும் இவர்கள் உங்களால் உதவ முடியுமா என்ற வாசகம் அடங்கிய பேனர்களை கையில் வைத்துக் கொண்டு, தங்களுக்கு உதவி செய்து வரும் இந்திய டாக்டரின் தொலைபேசி எண்ணுடன் மிகவும் பரிதாபமாக அமர்ந்திருக்கின்றனர். இவர்களை தாயகத்துக்கு அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?