வங்காளதேசம் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 13 பேர் பலி…!!
வங்காளதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வங்காளதேசத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவில் ஆளும் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. முதற்கட்டமாக 712 யூனியன் பிரதேசங்களுக்கு, 4,275 இடங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தெற்கு கடற்கரையை ஒட்டிய பகுதியான மத்பரியாவில் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது. தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆதரவாளர்கள் கலைந்து செல்லாததை அடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் போலீஸ் மற்றும் எல்லை காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதோடு, வாக்குப் பெட்டிகளை பறித்து கொண்டனர்.
தேர்தல் தொடர்பான வன்முறையில் மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்பரியா பகுதியில் மட்டும் 5 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காக்ஸ் பஜார் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் இரண்டு பேரும், ஜலகத்தி, நெட்ராகோனா மற்றும் சிரஜ்கன்சி பகுதிகளில் தலா ஒருவர் கொல்லப்பட்டனர்.
Average Rating