புதுவையில் 1½ வயது ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தொழிலாளி…!!
புதுவை வாரணப்பேட்டை கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது மனைவி லூர்துமேரி (18). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது.
வினோத்தின் பெரியப்பா வேலு (42) தொழிலாளி. இவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் அவர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தார்.
வினோத்தின் வீட்டின் அருகே வேலுவின் வீடு உள்ளது. இன்று காலை வினோத்தின் மகன் ஜெகதீசன் வேலுவின் வீட்டில் விளையாடி கொண்டு இருந்தான். வேலுவின் மகள் கவுசல்யா (18). அந்த குழந்தையை கையில் தூக்கினார். அப்போது திடீரென்று வேலு அங்கு வந்தார். கவுசல்யாவின் கையில் இருந்து ஜெகதீசனை பிடுங்கி தலைகீழாக தூக்கி தரையில் 3 முறை ஓங்கி அடித்தார். இதில், அந்த குழந்தை படுகாயம் அடைந்தது. காது மற்றும் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே வேலு குழந்தையை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டார்.
இதை அறிந்த வினோத்தும், லூர்துமேரியும் அங்கே ஓடி வந்தார்கள். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை பார்த்து கதறி துடித்தார்கள். கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக வேலுவை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட குழந்தையை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Average Rating