வீடற்ற நபரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் யார்?..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் வீடற்ற நபர் ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் St Gallen நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கி சூடு நிகழ்ந்ததாக பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
தகவல் பெற்று அப்பகுதிக்கு விரைந்து சென்று பொலிசார் ஆய்வு செய்தபோது, அங்கு வீடற்ற 42 வயதான நபர் ஒருவர் உடலில் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
உடனடியாக சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது, துப்பாக்கியால் சுட்ட நபருக்கு 40 முதல் 50 வயது இருக்கலாம் என்றும், சம்பவம் நிகழ்ந்தபோது அவர் ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் குடையும் வைத்திருந்ததாக தெரிவித்தனர்.
அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் 30 வயதான வீடற்ற நபர் ஒருவரை மற்றொரு நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்தில் கொலையாளியை பொலிசார் அதே இடத்திலேயே கைது செய்தனர்.
ஒரு நகரில் இருவர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating