காலையில் மனைவி, மாலையில் கணவர்: மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!
கரூரில் நேற்று காலையில் மனைவி உயிரிழந்த நிலையில் மாலையில் கணவரின் உயிரும் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ராயனூரை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 81). வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நளாயினி (66). இவர்களுக்கு திருமணமாகி 46 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. 2பேரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நளாயினி நேற்று காலை உயிரிழந்தார். நளாயினியின் உடலை எரியூட்ட மயானத்துக்கு எடுத்து செல்வதற்கு முன் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
அப்போது சுமங்கலி சடங்கு செய்து கொண்டிருந்த போது, நளாயினியின் கழுத்தில் இருந்த தாலியை அகற்றியவுடன் அவரது கழுத்தில் மஞ்சள் கயிற்றை சந்தானகிருஷ்ணன் அணிவித்தார். இச்சடங்கு முடிந்த ஒரு சில நிமிடங்களில் மாலை 4-30மணிக்கு சந்தானகிருஷ்ணனின் உயிரும் பிரிந்தது. மனைவி காலையில் இறந்த நிலையில், அதே நாள் மாலையில் கணவரும் உயிரிழந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
நளாயினி உடல் கரூர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. சந்தான கிருஷ்ணன் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெற்று முடிந்ததும், உடல் தகனம் செய்யப்படுகிறது.
Average Rating