இரும்பு கம்பி வைத்து விளையாடிய மாணவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்…!!
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் சவரிராஜன். இவருடைய மகன் ஆருண் (வயது 16), வல்லம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி வளாகத்தில் இரும்பு கம்பியை வைத்துக்கொண்டு ஆருண் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஆருண் கையில் இருந்த இரும்புக்கம்பி எதிர்பாராத விதமாக அவனது நெற்றியிலேயே குத்தியது.
இதனால் வலியால் துடித்த ஆருணை பள்ளி நிர்வாகிகள் உடனே மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே ஆருண் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாணவன் சாவுக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி ஆருணின் பெற்றோர், உறவினர்கள் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Average Rating