திருமணத்துக்கு மறுத்த மணமகன் வீட்டின் முன் புதுப்பெண் போராட்டம்..!!
சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கீதா (வயது26). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவருக்கும் சேர்ந்தமரம் அருகே உள்ள தன்னூத்தை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் குருசாமி (29) என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
டிப்ளமோ முடிந்துள்ள குருசாமி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பெண் வீட்டார் தரப்பில் வரதட்சணையாக ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் நகை தருவதாக பேசப்பட்டது. திருமணம் தை மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தை மாதம் பிறந்தும் திருமணம் நடத்த தேதி தராமல் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டு வந்ததுடன், திருமணத்துக்கும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த புதுப்பெண் கீதா நேற்று பட்டுசேலை, நகைகள் அணிந்து தன்னூத்து கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீதாவிடமும் அவரது பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கீதா மணமகன் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இரவிலும் அவரது போராட்டம் நீடித்தது.
இன்று 2-வது நாளாக கீதா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் திருப்பூரில் இருந்து குருசாமியை வரவழைத்து இதுபற்றி பேச போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்று பேச்சுவார்த்தை நடத்தி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Average Rating