உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு; சிம்பாப்வ: உலகின் மகிழ்ச்சியற்ற மிகவும் துன்பகரமான நாடாக தெரிவு
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்விலேயே டென்மார்க் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது. மேற்படி ஆய்வின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் நிலவும் ஜனநாயகம், சமூக சமத்துவம் மற்றும் அமைதியான சூழ்நிலை என்பனவற்றை கருத்திற்கொண்டே இக்கௌரவம் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிம்பாப்வேயானது உலகின் மகிழ்ச்சியற்ற மிகவும் துன்பகரமான நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் உச்சநிலையை அடை ந்துள்ள அரசியல் மோதல்கள் சமூக பிணக்குகள் என்பனவற்றைக் கவனத்திற்கொண்டே இம்மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகவும் செல்வந்த நாடான அமெரிக்காவானது உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் வரிசையில் 16 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 52 நாடுகளில் 42 நாடுகளில், 1981 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மகிழ்ச்சி நிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய மிக்ஸிகன் சமூக ஆய்வு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் அறிஞர் ரொனால்ட் இங்லேஹார்ட் விபரிக்கையில், “”ஜனநாயகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் பலமான உள்ளக தொடர்பு உள்ளது. இந்நிலையில் டென்மார்க்கானது உலகின் செல்வந்த நாடாக திகழாவிடினும் உலகின் மிகவும் மகிழ்ச்சிமிக்க சுபீட்சமான நாடாக விளங்குகிறது” என்று கூறினார். உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் வரிசையில் வட அயர்லாந்து, ஐஸ்லாந்து, சுவிட்ஸர்லாந்து, நெதர்லா ந்து, கனடா, சுவீடன் என்பனவற்றுடன் வறிய நாடுகளான புயர்ரோ றிகோ மற்றும் கொலம்பியா என்பனவும் இடம்பிடித்துள்ளன. மேற்படி ஆய்வானது 350,000 பேருக்கும் அதிகமான மக்களிடையே நடத்தப்பட்டது.
Average Rating