இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இலங்கையுடனான தீர்க்கமான போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியதன்மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா தகுதிபெற்றது. கராச்சியில் நேற்று நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாமர கபுகொதர அதிகபட்சமாக 75 ஓட்டங்களையும் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலா 50 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து 309 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி 46.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிக்கொண்டது. இந்திய அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷெவாக், காம்பீர் ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். ஷெவாக் 42 ஓட்டங்களையும் காம்பீர் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களையடுத்து வந்த சுரேஷ் ரெய்னா மற்றும் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி ஆகியோரும் சிறப்பாக ஆடினர். ரெய்னா 54 ஓட்டங்களையும் தோனி 67 ஓட்டங்களையும் பெற்றனர். இதேவேளை, தனது சொந்த நாட்டில் நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பறிகொடுத்த நிலையில் அது இன்று தனது கடைசிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating