நிராயுதபாணிகளான கடற் படையினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்! 69 பேர் சம்பவ இடத்தில் பலி!!
ஹபறன திகன்பதன என்ற இடத்தில் இன்று பிற்பகல் எல்.ரீ.ரீ.ஈ. நிராயுதபாணிகளான கடற்படையினர் மீது மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலொன்றில் 69 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விடுமுறையில் வீடு செல்லும் நிராயுதபாணிகளான கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டிகள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கன்ரர் ரக ட்ரக் வண்டியொன்று இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இத்தாக்குதலை மேற்கொண்டது.
கடற்படையினர் பயணித்த 13 பஸ் வண்டிகளில் 6 வண்டிகள் தாக்குதலுக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தன. இந்த வண்டிகளுக்குள் சிக்குண்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது விடுமுறைக்காக செல்வோரும், விடுமுறை முடிந்து கடமைக்குச் செல்வோருமாக மொத்தம் 400 கடற்படையினர் அங்கு இருந்தனர் என அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.