பஹரைன் நாடாளுமன்றத்திற்கு முதல் பெண் உறுப்பினர் தேர்வு
Read Time:1 Minute, 21 Second
வளைகுடா நாடான பஹரைனில், முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை பெண் ஒருவர் வென்றுள்ளார். லத்திபா அல் குவாட் என்னும் அந்தப் பெண்மணி போட்டியிட்ட தொகுதியில் அவரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும் போட்டியிடாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பஹரைன் நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான லத்திபா அல் குவாட் அவர்கள், தனது வெற்றி, பஹரைன் நாட்டுப் பெண்கள், அந்த நாட்டு ஆண்களுக்கு நிகராக பலவிதமான பதவிகளிலும் திறம்படச் செயற்படக் கூடியவர்கள் என்பதைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.
நவம்பர் மாத பிற்பகுதியில் நடக்கவிருக்கும் ஏனைய தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில், 200 க்கும் அதிகமான வேட்பாளர்களில், 17 பெண்களும் போட்டியிடுகிறார்கள்.