இடம்பெயர்ந்த மக்களுக்கு புளொட் தொடர்ந்து நிவாரண உதவி
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியாப் பகுதியை வந்தடைந்த பொதுமக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினர் நேற்றையதினமும் 40,000ற்கும் அதிகமான உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளனர். நேற்றுமுன்தினமும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொதிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்டமை தெரிந்ததே. இதற்கான அன்பளிப்புப் பொருட்கள், மற்றும் பெருமளவு உணவுப்பொதிகள் என்பவற்றை வவுனியா வாழ் மக்கள் மற்றும் வவுனியா வர்த்தகர்கள் வழங்கி வருவதுடன், உணவினை தயாரிப்பதற்கு வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்கும் பணிகளை புளொட் நிவாரணப் பிரிவினர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பிருந்து ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் புளொட் அமைப்பு நேற்று விடுத்திருந்த வேண்டுகோளில், எமது வேண்டுகோளை ஏற்று இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் வவுனியா மக்களும் வர்த்தகர்களும் தங்களால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். இந்த உதவிகளை வழங்குவதில் வவுனியா மக்கள் மாத்திரமன்றி, வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களும் பங்களிப்பை செலுத்த வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். தொடர்ந்தும் இவ்வாறான உதவிகளை நாம் வழங்க முயற்சித்துள்ள நிலையில், மக்கள் மேலும் உதவிகளை வழங்க முன்வருவார்கள் என்றும் நம்புகிறோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க இன்றையதினமும் பெருமளவிலான உணவுப் பொதிகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு புளொட் நிவாரணப் பிரிவினர் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. தவிர வவுனியா வைத்தியசாலையில் காயமடைந்து, நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வன்னியிலிருந்து வந்த மக்களுக்கு புளொட்டின் நிவாரணப் பிரிவினர் நீண்ட காலமாகவே அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating