இலங்கைக்கான உதவித் தொகையை அதிகரித்தது கனடா
கனடாவின் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜே.ஒடாவின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை கனடா அதிகரித்துள்ளது. 7.5 மில்லியன் அமெரிக்க டொலராகத் தனது உதவித் தொகையை கனடா உயர்த்தியுள்ளது. “பொதுமக்களின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இதனால் அவர்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம்” என்றார் கனேடிய அமைச்சர். இடம்பெயர்ந்த மக்களின் மனிதநேய உதவிகள் குறித்து கனேடிய அமைச்சர், இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமையக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான உணவு, நீர், தற்காலிக கூடாரங்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருள்களுக்கான மேலதிக நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறினார். “மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் அனைத்துத் தரப்பிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், உடனடி உதவிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார் அவர். இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக சீனா 1 மில்லியன் அமெரிக்கடொலர் நிதியதவி வழங்கவுள்ளது.
Average Rating