ரவிசங்கரின் யுத்தநிறுத்தக் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தநிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலையாளராகச் செயற்பட வாழும் கலையமைப்பின் சிறிரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வாழும் கலையமைப்பின் தலைவர் சிறி ரவிசங்கருடனோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புடனோ போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாரில்லையென்ற நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லையெனவும், இது மக்கள் மத்தியில் பிழையான அர்த்தத்தை ஏற்படுத்திவிடக்கூடாது எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவிசங்கர் ஒரேயொரு தடவையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் திட்டமெதுவும் இல்லையென்பதை அப்போதே ஜனாதிபதி கூறியிட்டதாகவும் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி, ரவிசங்கருக்கு விளக்கியுள்ளார். எனினும், இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ரவிசங்கரைக் கடந்த திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையையடுத்தே, விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்தநிறுத்தம் குறித்து இருதரப்புடனும் பேச்சுநடத்தத் தயார் என வாழும் கலையமைப்பின் தலைவர் சிறி ரவிசங்கர் அறிவித்திருந்தார். இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சிறிரவிசங்கர், வவுனியா நலன்புரி நிலையங்களையும் நேரில் சென்று பார்வையிட்டிருந்ததுடன், அரசாங்கத் தரப்பினரையும் சந்தித்திருந்தார். பிச்சைக்காரர்களைப் பார்த்திராத வன்னிப் பிராந்தியத்தில் பலர் உணவுக்காகக் கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக ரவிசங்கர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating