மலேரியா நோயால் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதிப்பு: நிமால் சிறிபால.டி.சில்வா
கிளிநொச்சி போன்ற காட்டுப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் 500ற்கும் அதிகமானவர்கள் கடந்த வருடம் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். 1968ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேரியா நோயின் தாக்கம் இலங்கையில் தற்பொழுது அதிகரித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். 2008ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட 670 பேரில் 500ற்கும் அதிகமானவர்கள் இராணுவத்தினர் என அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். ஆரம்ப கட்டத்திலேயே மலேரியா நோயைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் பகுதிகளில் மலேரியா நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,463 ஆக் காணப்பட்டதுடன், 2005ஆம் ஆண்டு 820 ஆகவும், 2006ஆம் ஆண்டு மீண்டும் அதிகரித்து 11,972 ஆகவும், 2007ஆம் ஆண்டு 7320ஆகவும், 2008ஆம் ஆண்டு 6435ஆகவும் காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். “டெங்கு மற்றும் சிக்குன்குன்யா ஆகியவை மனிதரால் உருவாக்கப்படும் நோய்கள். ஏனெனில் இந்த நுளம்புகள் 500 ஏக்கர் பரப்புக்குள்ளேயே அவை சுற்றித்திரியும். இதனால், இந்த நோய் காவி நுளம்புகளின் பெருக்கத்துக்கு நாமே பொறுப்புக் கூறவேண்டும்” என சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். இதேவேளை, ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சுகாதாரப் பிரச்சினைகள் காணப்படுவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடநெருக்கடி காரணமாகத் தோன்றியிருக்கும் சுகாதாரச் சீர்கேடுகளால் மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் இலகுவில் பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating