ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியமை கே.பி மூலம் அம்பலம்
புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம் மற்றும் அவரது குடும்ப நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. நிர்ணய மோசடியில் கடந்த வெள்ளிக்கிழமை அவரும் அவருடன் மேலும் ஐந்துபேரும் அமெரிக்க புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் புலிகளுக்கு அவர் உதவினார் என்ற குற்றச்சாட்டு உண்மையற்றதென ராஜரட்ணத்தின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இலங்கையில் 2004 டிசம்பர் 20ம்திகதி சுனாமி ஏற்பட்டபின் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக அவர் குறைந்தபட்சம் 5மில்லியின் டொலர்கள் நிதியை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் 2007ம் ஆண்டுக்கு பிறகே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் புலிகளுக்கு நிதியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு தொடர்ச்சியாக பெருமளவு நிதியுதவிகளை வழங்கி வந்துள்ளார் என்று தற்போது கைதுசெய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் சர்வதேச பொறுப்பாளரான கே.பி என்கிற குமரன் பத்மநாதன் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளதாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் ராஜரட்ணம் பாரிய நிதியினை வழங்கியிருப்பதாகவும் கே.பி குறிப்பிட்டுள்ளதாக நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Average Rating