திருடப்பட்டதோ பலாக்காய்.. கிடைத்ததோ பலாப்பழம்!!
தனது வீட்டுத்தோட்டத்தில் திருடப்பட்ட இரண்டு பலாக்காய்களை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்த பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்திலிருந்து பலாப்பழங்கள் இரண்டினையே பெற்றுச்செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
தனது வீட்டுத் தோட்ட பலாமரத்திலிருந்த இரண்டு பலாக்காய்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகரான சுனில் விஜேசேகர, கடந்த 16 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸார், அவர்களை ஹொரணை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து அவ்விருவரையும் பிணையில் செல்ல அனுமதியளித்த ஹொரணை நீதவான், திருடப்பட்ட இரண்டு பலாக்காய்களையும் நீதிமன்றத்திடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.அதன்பிரகாரம் இரண்டு பலாக்காய்களும் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் இரு பலாக்காய்களையும் பெற்றுச் செல்வதற்காக இன்று 18ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதவான் அன்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்பிரகாரம் இன்று 18 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் பொலிஸ் அத்தியட்சகரான சுனில் விஜேசேகர சிவில் உடையில் முச்சக்கரவண்டியில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
பதிவாளரிடமிருந்து அவர் தனது வீட்டுத்தோட்டத்திலிருந்து களவாடப்பட்ட பலாக்காய்களை அல்ல இரண்டு பலாப்பழங்களையே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டு நாட்கள் தாமதமானதால் இரண்டு பலாக்காய்களும் பழுத்துவிட்டன.
மில்லாவ, கிதெல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இறப்பர் பால் வெட்டும் இருவரே இவ்வாறு பலாக்காய்களைத் திருடியதாக மேற்படி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating