இலங்கை தமிழர் ஆதரவு போராட்டம்ராமதாஸ் திடீர் விலகல்
பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பழ. நெடுமாறனின் தலைமையில் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையைக் கண்டித்தும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று நெடுமாறன் தெரிவித்திருந்தார். ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் சென்னையிலும், மதுரை போராட்டத்தில் வைகோவும் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இப்போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
இலங்கை ராணுவத்தின் அடக்குமுறையைக் கண்டித்து பழ. நெடுமாறன் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் சில அரசியல் காரணங்களால் பாமக பங்கேற்காது. அதே நேரத்தில் இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை பாமக எடுத்து வருகிறது. எனவே இப்போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.