வட்டுக்கோட்டையில்; பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு..!
யாழ் வட்டுக்கோட்டை தெற்கு ஏ-165 கிராமசேவகர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேச வெற்றுக்காணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பிறந்து ஒன்றிரண்டு நாட்களேயான பச்சிளம் சிசு ஒன்று மல்லாகம் நீதிபதி முன்னிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றுக்கு அருகாமையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கிணற்றை எட்டிப்பார்த்த போது மிதந்துகொண்டிருந்த சிசுவின் சடலத்தை பொம்மையென்று நினைத்து கல்லால் எறிந்துள்ளனர்.
இதனால் சடலத்தின் வயிற்றுப்பகுதியில் காயமேற்பட்டு குடல் வெளியில் வருவதைக் கண்ட சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு முறையிடப்பட்டு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சடலம் வெளியில் எடுக்கப்பட்டது.
சடலத்தைப் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த சிசுவானது வைத்தியசாலையில் பிரசவிக்கப்பட்டதன் அடையாளமாக தொப்புள் கொடிக்கான கிளிப் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating