புளொட் மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அதி உயர்பீடத்தினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் முற்பகல் யாழ். கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது.
இதில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்,, ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், புளொட் அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் தொலைபேசியின் ஊடாகவும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விசேட கலந்துரையாடலின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் பலவிதமான வதந்திகள் பரப்பப்பட்டு வருவது குறித்தும், முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாணம் தொடர்பில் வெளியான செய்திகள் தொடர்பிலும் பேசப்பட்டதுடன், இத்தகைய வதந்திகளுக்கு உடனடியாகவே முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தும் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் திரு.சு.சதானந்தம்(ஜே..பி.) அவர்களின் முன்னிலையில் வட மாகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களுள் ஒருவருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இது குறித்து புளொட் தலைவர் சித்தார்த்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,
கடந்த 11ஆம் திகதி யாழில் நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கினை கண்டிக்கும் வகையிலேயே கலந்துகொள்ளாமல் விட்டதாகவும், இதனைத் தொடர்ந்து பலரும், பல்வேறு ஊடகங்களும் இது குறித்து தொடர்ச்சியாக வதந்திகளைப் பரப்பிவருவதன் காரணமாக அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே எமது கட்சியின் செயலாளர் சு.சதானந்தம்(ஜே.பி) அவர்களின் முன்னிலையில் நானும் ஜி.ரி.லிங்கநாதனும் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டோமென்றும் தெரிவித்துள்ளார்.
Average Rating