சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்
சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி பறித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீவ் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
திருவனந்தபுரத்தில் வழக்கமான சோதனைகளை முடித்து கொண்டு சுஜீவ்குமார் சவுதி அரேபியாவின் சார்ஜா நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருடைய பாஸ்போர்ட்டை அதிகாரி சோதனை செய்தார். பின்னர் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டார். இதுகுறித்து சுஜீவ் குமார் கூறியதாவது:
பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தையும், எனது முகத்தையும் மாறி மாறி அந்த அதிகாரி பார்த்தார். பின்னர் எனது முகத்தில் இருக்கும் மீசையை காட்டி, இதை எப்படி இவ்வளவு பெரிதாக வளர்த்திருக்கிறீர்கள் என்றார்.
நான் பதிலுக்கு சிரித்தேன். பின்னர் அவர் சீரியசாக அதிகார தோரணையில், முகத்தில் இருக்கும் மீசையை மழித்து கொண்டு வந்தால்தான் பாஸ்போர்ட் தர முடியும்.
இல்லை என்றால் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது. இங்கிருந்து செல்லுங்கள். அடுத்த பயணியை விசாரிக்க வேண்டும் என்று கூறி பாஸ்போர்ட்டை தர மறுத்தார்.
இதனால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தேன். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகின. பின்னர் மேலதிகாரியிடம் இதுகுறித்து தெரிவித்த பின்னர் அவர் என்னை விசாரித்து எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர உத்தரவிட்டார்.
இவ்வாறு சுஜீவ் குமார் கூறினார். இதுகுறித்து சார்ஜா வெளியுறவு துறை தலைவர் அப்துல்லா பின் ஷாகுவிடம் கேட்ட போது, இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடக்கிறது என்றார்.
Average Rating