கேரளாவில் பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் கொலை: 3 பேர் தலைமறைவு!!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் அப்துல் (வயது 56). இவரது மகள் அசீனா (27). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அசீனா மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது பெற்றோர் அவருக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த பயனும் இல்லாததால் மகளை வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர்.
அவரது மனநலம் பாதிப்பு காரணமாக திருமணமும் செய்து வைக்க முடியவில்லை. இதனால் அவரது பெற்றோர் மனவேதனையுடன் காலத்தை கடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிராஜுதீன் என்பவர் அப்துலுக்கு அறிமுகமானார். அவர் தன்னை ஒரு மந்திரவாதி என்றும், அசீனாவுக்கு பேய் பிடித்து இருப்பதால்தான் இந்த நிலை உள்ளது. அந்த பேயை தன்னால் ஓட்ட முடியும் என்று கூறினார்.
அவரது பேச்சை உண்மை என்று நம்பிய அப்துலும் பேய் ஓட்ட சம்மதித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்துல் வீட்டுக்கு சிராஜுதீனும் அவரது நண்பர்கள் ஹசன் குஞ்சு, கபீர் ஆகிய 3 பேரும் வந்தனர். அவர்கள் நள்ளிரவில் ஒரு தனி அறையில் அசீனாவை அடைத்து வைத்து பூஜையை தொடங்கினார்கள்.
கோழியை அறுத்து ரத்தத்தை தெளித்தும், சாட்டையால் அசீனாவை அடித்தும் பேய் விரட்டும் பூஜை நடந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மந்திரவாதி சிராஜுதீன் உள்பட 3 பேரும் உடனே கதவை திறக்க வேண்டாம். அரை மணி நேரம் கழித்து சென்று பாருங்கள். உங்கள் மகளை பிடித்த பேய் ஓடி விட்டது என்று கூறி விட்டு சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து பூஜை நடந்த அறைக்கு சென்ற அப்துல் அதிர்ச்சியில் உறைந்து போனார். அங்கே அசீனா உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அசீனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
பேய் விரட்டுவதாக கூறி தனது மகளின் உயிரை பறித்த சிராஜுதீன் உள்பட 3 பேர் மீதும் கருநாகப்பள்ளி போலீசில் அப்துல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Average Rating