பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்: சத்யபாமா எம்பி!!
பாராளுமன்றத்தில் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்யபாமா ‘‘மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை’’ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:–
தமிழகத்தில் முதல்– அமைச்சர் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தந்துள்ளதை போல் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும். மகளிர் நலன் காக்கும் எங்கள் தலைவி முதல் அமைச்சர், பொள்ளாச்சி பெண்கள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தவுடன் அந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பண உதவி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
2012–ம் ஆண்டு டெல்லியில் நகரும் பேரூந்தில் நடந்த கும்பல் பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு பிறகு அந்த பெண் இறந்து போனார். இந்த சம்பவத்துக்கு பிறகு 2013–ம் ஆண்டில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 13 அம்ச திட்டத்தை தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தினார். பாலியல் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் பொது வாழ்வில் ஈடுபட மறுப்பதற்கு பாதுகாப்பின்மையே காரணம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதோடு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையான தண்டிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை , பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல. அனைவரின் பிரச்சினையும் தான். நாட்டின் மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் வேலைக்கு செல்ல அஞ்சினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி வலுபெறும்?
எனவே அவசரம்… அவசரமாக அள்ளி தெளிக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் ஆகும்.
இவ்வாறு சத்யபாமா எம்.பி. பேசினார்.
Average Rating