வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
திண்டுக்கல் அடுத்துள்ள அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்தி(வயது24). வத்தலக்குண்டு அருகில் உள்ள கே.புதுப்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வருபவர் விவேக்(24). இவர்கள் 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.
தற்போது விவேக் தனது காதலியை திருமணம் செய்ய அவரது வீட்டில் பெண் கேட்டபோது அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர். மேலும் கிருஷ்ணகாந்தியை வீட்டில் வைத்து அடைத்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
நேற்று கிருஷ்ணகாந்தி வத்தலக்குண்டுவிற்கு தனது காதலனை பார்க்க வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் போலீஸ் ஸ்டேசன் பின்புறம் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் வத்தலக்குண்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர். சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் கருப்பையா ஆகியோரிடம் விவேக் தெரிவிக்கும்போது எங்கள் காதலுக்கு கிருஷ்ணகாந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையூறாக இருந்தனர்.
எனவே அவர்களால் எங்களுக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்தார். அதன்பேரில் கிருஷ்ணகாந்தியின் பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கிருஷ்ணகாந்தி தான் காதலனுடன் செல்ல விரும்புவதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
தான் அணிந்திருந்த கொலுசு, வாட்ச் மற்றும் செல்போன் ஆகிய அனைத்தையும் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
Average Rating