22 வயது பெண்ணை மணந்த 17 வயது வாலிபர்: ஓமலூர் போலீசில் தஞ்சம்!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கனம் பட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சக்திவேல் (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இதே போன்று மேட்டூர் தாலுகா அரங்கனூர் பகுதியை சேர்ந்த கூத்தன் மகள் சந்திரா (22). இவரும் அதே நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நூல் மில்லிற்கு வேலைக்கு சென்ற சக்திவேலை காணவில்லை இதையறிந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். வேலை செய்யும் நூல் மில்லில் விசாரித்தனர். அப்போது சந்திரா என்ற பெண்ணும் இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என தெரிய வந்தது.
உடனே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது சேலத்தை அடுத்த சித்தர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் கடந்த இரண்டு நாட்களாக சந்திராவின் வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. உறவினர்கள் தேடுவதை அறிந்த காதலன் மற்றும் காதலி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதை அறிந்த இரு வீட்டின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. காதலர்களிடம் பயிற்சி டி.எஸ்.பி. கீதாஞ்சலி விசாரித்தார். அப்போது காதலன் சக்திவேலுக்கு இன்னும் திருமண வயதை கடக்கவில்லை என அறிவுரை கூறி இருவரையும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 17 வயது சிறுவனை 22 வயது பெண் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் காவல் நிலையத்திற்கு வந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காதலி சந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று கணவனுடன் வாழாமல் தாய் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating