இளம்பெண் குழந்தையுடன் சாவு: மாமியாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்!!
நாகர்கோவில் மறவன் குடியிருப்பு சென்னவண்ணன் விளையை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி வைகுண்டலெட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் இருந்தது. கடந்த 6–ந்தேதி வைகுண்டலெட்சுமி தனது 6 மாத கைக்குழந்தையுடன் தீயில் கருகி பலியானார்.
இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருமணமாகி 1½ வருடமே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
வைகுண்டலெட்சுமியின் பெற்றோர், அவரது கணவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது வைகுண்டலெட்சுமி எழுதி வைத்திருந்த 7 பக்க கடிதத்தை ஆர்.டி.ஓ.விடம் அவரது பெற்றோர் ஒப்படைத்தனர்.
அவரது மகள் சாவிற்கு கணவரும், மாமியாரும் காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து போலீசார் வைகுண்டலெட்சுமியின் கணவர் சிவா, மாமியார் கலைச்செல்வி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து சிவாவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தலைமறைவாகி உள்ள கலைச்செல்வியை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating