நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!
நாமக்கல் சின்ன முதலைப்பட்டி என்.பி.எஸ்.கோல்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி விஜயபிரியா (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், சித்தார்த் (3½) என்ற மகனும் உள்ளனர்.
சுப்பிரமணி மற்றும் 31 பேர் சேர்ந்து ஒரு பைனான்ஸ் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும் சுப்பிரமணி பராமரித்து வந்தார்.
இந்த மாதம் நிதிஆண்டு இறுதிமாதம் என்பதால் நிதிநிறுவனத்தில் மற்ற பங்குதாரர்கள் கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது கணக்கில் ரூ.40 லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பங்குதாரர்கள், ரூ.40 லட்சத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு என்றும் அந்த பணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியிடம் தெரிவித்து உள்ளனர்.
இதை கேட்டு சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார் என்ன செய்வது என்று தெரியாமல் மன குழப்பத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் சுப்பிரமணி அவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது என்பதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இது பற்றி அவர் தனது மனைவியுடம் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று சுப்பிரமணி, அவரது மனைவி விஜயபிரியா ஆகியோர் விஷம் குடித்து விட்டு மகள் கீர்த்தனா, மகன் சித்தார்த் ஆகியோருக்கும் கொடுத்தனர்.
இதையடுத்து அனைவரும் மயங்கினர். இது பற்றி தெரியவந்ததும் அக்கம் பக்கத்து வீட்டினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating