பயிர்கள் சேதமடைந்ததைப் பார்த்த அதிர்ச்சியில், மாரடைப்பால் மேலும் 3 விவசாயிகள் மரணம்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில், வாங்கிய கடனை அடைக்க இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற வேதனையில் மேலும் 3 விவசாயிகள் மாரடைப்பினால் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் பருவமற்ற காலத்தில் பெய்த தொடர் மழையால், அறுவடையை எதிர்நோக்கியிருந்த பல லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் வளர்ந்திருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி முசாபர்நகர் மாவட்டத்தில் தங்களது நிலங்களில் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்ட அதிர்ச்சியில் துர்கண்ட்பூர் கிராமத்தை சேர்ந்த சுக்பிர்(57), சிக்ரி கிராமத்தை சேர்ந்த ரஷித் கான்(60) மொஹ்ட்பூர் ராய்சிங் கிராமத்தை சேர்ந்த கேம் சந்த்(75) ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
முசாபர் நகர் மக்களில் பலர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், போககெரி கிராமத்தை சேர்ந்த பிரிஜேந்தர்(58), கோத்னாவை சேர்ந்த பாரு(55) கான்பூரை சேர்ந்த மகேந்தர் (70) என நேற்று ஒரே நாளில் மேலும் மூன்று பேர் மாரடைப்பால் பலியாகியுள்ளது அப்பகுதி விவசாயிகளின் சோகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் வருவாய்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating