புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!!
புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் இருந்து மச்சுவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காமராஜபுரம். இப்பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது நெருங்கிய நண்பர் கருப்பையா, அவரது மனைவி செல்வி. (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது).
இதில் கருப்பையா திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தனது நண்பரான கார்த்திகேயனிடம் தனது குடும்பத்தினரை நன்கு பார்த்துக்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். கார்த்திகேயனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கடி கருப்பையாவின் வீட்டிற்கு சென்று வந்த கார்த்திகேயனுக்கு அவரது மனைவி செல்வியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த மற்ற நண்பர்கள் இதனை கடுமையாக கண்டித்தனர். நம்மை நம்பி விட்டுச்சென்ற கருப்பையாவின் குடும்பத்திற்கு துரோகம் செய்வது தவறு என்றும் கூறி கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் இதனை காதில் வாங்கிக்கொள்ளாத கார்த்திகேயன் தனது செயலை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயனின் நண்பர்கள் அவருக்கு சரியான பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று இரவு பணி முடித்துவிட்டு திரும்பிய கார்த்திகேயனை அவரது நண்பர்கள் கணேசன், அய்யப்பன், மிதுன், ராஜா ஆகிய 4 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு மீண்டும் அறிவுரை கூறிய நண்பர்களை தாக்க முயன்றதோடு ஆபாசமாகவும் திட்டியுள்ளார். அப்போது நண்பர்கள் 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திகேயனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் முதுகு, தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயனை அங்கேயே போட்டு விட்டு அவர்கள் சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிய கார்த்திகேயனை அங்கு சென்றவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Average Rating