லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு!!
தூத்துக்குடி டூவிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு டூவிபுரத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் பட்டா வழங்க முடிவு செய்தனர்.
அதன் பேரில் அற்புத ராஜுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி சப்–கலெக்டர் அலுவலக வளாகத்தில் நத்தம் நில வரி திட்ட தனி தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வரும் பேச்சி நாகசுதா என்பவர் பட்டாவை கொடுப்பதற்கு ரூ.8 ஆயிரம் பணம் கேட்டாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த அற்புதராஜ் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அற்புதராஜ் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சர்வேயர் பேச்சி நாகசுதாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
அதனை பெற்று கொண்ட பேச்சி நாகசுதா பட்டாவை அற்புதராஜிடம் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ராய், இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், பீட்டர் மற்றும் போலீசார் சர்வேயர் பேச்சி நாகசுதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் பேச்சி நாதசுதா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating