ஆண் குழந்தை பிறப்பதற்காக ராம்தேவ் தயாரிக்கும் மருந்து: தடை செய்ய எம்.பி.க்கள் கோரிக்கை!!
டெல்லி மேல்–சபையில் நேற்று ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. கே.சி.தியாகி எழுந்து ஒரு மருந்து பொட்டலத்தை காட்டினார். அவர் பேசுகையில் இது அரியானா மாநில அரசால் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாபா ராம்தேவ் தயாரித்த குழந்தை பாக்கியம் தரும் மருந்து. இதை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இந்த மருந்தோ பாலின வேறுபாட்டை ஊக்கப்படுத்துகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
தற்போதுதான் இந்த மருந்தை அரியானாவில் ஒரு மருந்து கடையில் இருந்து விலை கொடுத்து வாங்கியதாகவும், அதற்கான ரசீது இருப்பதாகவும் தியாகி எம்.பி. கூறினார். பிரதமர் மோடி இந்த மருந்துக்கு அனுமதி அளித்துள்ளாரா? இந்த மருந்தை விற்பனை செய்வது சட்ட விரோதம், சட்டப்படி குற்றம் இதை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதே போல் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சனும் புகார் கூறினார். மருந்து பொட்டலத்தை சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நத்தாவிடம் கொடுத்தார். மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஆண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் மருந்தை தடை செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ஜே.பி.நத்தா, இந்த மருந்து ஆயுர்வேதம் சம்பந்தப்பட்டது. என்றாலும் அரசு இது பற்றி விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்து வாரில் உள்ள பாபா ராம் தேவின் பதஞ்சலி யோகா பீடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சிலர் சுயநலத்துடன் இது போன்று புகார் கூறுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த வகை மருந்துகள் ஆயுர்வேதத்தில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் மருந்துதான், பாலின மாற்றம் செய்யும் மருந்து அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.
Average Rating