தஞ்சை அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது!!
திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ்துரைராஜ் (வயது 30). இவர் திருவாரூர் அருகே உள்ள குளக்கரையில் உள்ள ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் சார்லஸ் துரைராஜ் பணி மாறுதலாகி தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர் சிந்துவுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். சிந்து பலமுறை, காதலனை செல்போனில் தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை.
இதனால் காதலன் தன்னை ஏமாற்றப் பார்க்கிறார் என சிந்து எண்ணினார். இதையடுத்து சிந்து, தனது காதலனை நேரில் சென்று சந்திப்பது என முடிவு செய்து திருவாரூரில் இருந்து புறப்பட்டு வந்தார். சார்லஸ்துரைராஜ் ஆலக்குடி ரெயில் நிலையத்தில் வேலை பார்ப்பதை அறிந்ததும் அங்கு சென்றார். அப்போது காதலனை சந்தித்து நான் வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன். ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டுள்ளார்.
மேலும் என்னை ஏமாற்றி விடலாம் என எண்ணுகிறாயா? என கேட்டுள்ளார். அப்போது சார்லஸ்துரைராஜ், சிந்துவை பார்த்து உன்னை யார் என்றே தெரியாது என கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிந்து தான் வைத்திருந்த கத்தியால் சார்லஸ்துரைராஜின் கழுத்து, தலைபகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சார்லஸ்துரைராஜை கத்தியால் குத்திய சிந்துவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
Average Rating