ஏற்காட்டில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விநாயகபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டாசு. இவரது மகன் இன்பா என்ற பாலமுத்து (வயது 26). இவர் ஏற்காடு பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் இவரை ஏற்காடு போலீசார் ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பூவனூரை சேர்ந்த வீராசாமி மகன் ராஜி என்கிற ராஜ்குமார் (27) ஏற்காடு பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார்.
இவரும் ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன. எனவே இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்காடு போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
போலீஸ் நிலையங்களில் இருவரும் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் சேகரிக்கப்பட்டு அதனை அறிக்கையாக தயார் செய்யப்பட்டது.
பின்னர் அந்த வழக்கு ஆவணங்களை ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமியிடம் வழங்கினார். போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், வாலிபர்கள் பாலமுத்து, ராஜ்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating