மார்த்தாண்டத்தில் கன்னியர் இல்லத்தில் இளம்பெண் மர்ம சாவு: போலீசில் தந்தை புகார்!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேலூர், ஆசாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவரது மகள் மீனா(வயது 17). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கன்னியர் இல்லத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கன்னியர் இல்ல வளாகத்தில் மீனா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி மீனாவின் தந்தை ராஜேந்திரனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மார்த்தாண்டம் வந்து போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கன்னியர் மடத்தில் எனது மகள் மீனா, படித்து வந்தார். அங்குள்ள நிர்வாகிகள் அவரை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவென்னியில் உள்ள அதே கன்னியர் இல்லத்தின் கிளையில் படிக்க ஏற்பாடு செய்வதாக என்னிடம் கூறினர். நானும் அதனை நம்பி எனது மகளை மார்த்தாண்டத்தில் உள்ள கன்னியர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தேன்.
இங்கு வந்த பின்பு எனது மகளை இங்குள்ள நிர்வாகிகள் படிக்க அனுமதிக்கவில்லை எனவும், அவரை கன்னியர் இல்ல சமையல் வேலைக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் எனது மகள் அடிக்கடி என்னிடம் கூறி வந்தார். நான் அவரை சமாதானப்படுத்தி வந்தேன்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக எனக்கு கன்னியர் இல்ல நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். நான் இங்கு வந்து பார்த்த போது எனது மகள் இறந்து விட்டார்.
அவரது சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இது பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இது பற்றி மார்த்தாண்டம் சப்–இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் கிரேசியஸ் விசாரணை நடத்தினார். பின்னர் இளம்பெண் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating