திருத்தங்கல் அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை: சகோதரி கணவர் கைது!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பக்கமுள்ளது செங்கமல நாச்சியார்புரம். இங்குள்ள வடக்கு தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி கார்த்திகா என்ற சுதா. இவர்களுக்கு 6 வயதில் சிவா என்ற மகன் உள்ளான்.
கார்த்திகாவின் தம்பி தென்னரசு (18). இவருக்கு சொந்தமான வீட்டில் தான் கார்த்திகா குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுடன் வசித்து வந்த தென்னரசு வீட்டை காலி செய்யும்படி சகோதரியிடம் அடிக்கடி கூறி வந்தார்.
இது தொடர்பாக மது அருந்திவந்தும் தகராறு செய்துள்ளார். இது கார்த்திகாவின் கணவர் முனியாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று தென்னரசு வீட்டில் தூங்கியபோது அங்கு வந்த முனியாண்டி, தலையணையால் அவரது முகத்தில் அமுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய தென்னரசு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் தெரிய வந்ததும் திருத்தங்கல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தென்னரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Average Rating