போலீஸ்காரரை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முன் பெண் மீண்டும் விஷம் குடித்தார்!!
தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் நிஷா (வயது 32). அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது முதல் கணவர் இவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் இவர் புதுவை ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த போது இவருக்கும், போலீஸ் ஏட்டு சுரேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் நிஷாவிடம் அவருக்கு சொந்தமான நிலங்களை விற்று பணத்தை தரும்படி சுரேஷ்குமார் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்த நிஷாவுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையொட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வில்லியனூர் போலீசில் நிஷா புகார் செய்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சமீபத்தில் போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன்பு நிஷா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். சிறிய அளவு விஷம் குடித்ததால் அவர் உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அவரிடம் நடவடிக்கை எடுப்பதாக ஐ.ஜி. பர்வீர்ரஞ்சன் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு சுரேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இதை அறிந்த நிஷா கோபம் அடைந்தார். ஏட்டு சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார். தான் கொண்டு வந்திருந்த பாட்டிலை திறந்து மீண்டும் விஷத்தை குடித்தார். பின்னர் அதிக அளவு மாத்திரைகளை எடுத்து விழுங்க முயன்றார்.
உடனே சப்–இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரை மாத்திரைகளை விழுங்கவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் மாத்திரைகளை நிஷா விழுங்கிவிட்டார். போலீஸ் நிலையம் முன்பு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிஷா மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating