திருவேற்காட்டில் கொலை வழக்கு கைதி நண்பருடன் மர்ம சாவு!!
குன்றத்தூர் திருநாகேஸ்வர காலனி காந்தி தெருவை சேர்ந்தவர் கவுஸ்பாஷா (வயது 32). இவர் திருவேற்காடு கோலடி சாலையில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்தார்.
இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது. இவரது நண்பர் சிராஜ் ஆட்டோ ஓட்டி வந்தார். அவரும் அதே பகுதியை சேர்ந்தவர்.
நேற்று கவுஸ்பாஷாவை பார்ப்பதற்காக சிராஜ் திருவேற்காடு சென்றார். பின்னர் கவுஸ்பாஷா தான் தங்கியிருந்த அறைக்கு சிராஜை அழைத்து சென்றார். அங்கு இருவரும் மது குடித்தனர்.
இதற்கிடையே இன்று காலை கவுஸ்பாஷா கறிக்கடையை திறக்க வரவில்லை.
இதனால் கடை உரிமையாளர் குமார், ஊழியர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கவுஸ்பாஷாவும், சிராஜும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அவர்கள் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதில் மர்மம் நீடிக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating