மேலூர் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை: கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை!!
மேலூர் அருகே அழகாபுரி பக்கம் பொட்டமுத்தான் கண்மாய் உள்ளது. இந்த பகுதியில் பிச்சை (50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். விவசாயியான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு 2 மாதம் முன்புதான் ஊருக்கு வந்திருந்தார். பிச்சைக்கு பஞ்சு (44) என்ற மனைவியும், 2 பெண்களும், 1 மகனும் உள்ளனர். மகன் கார்த்திக் கல்லூரி மாணவராவார்.
கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே பஞ்சு கோபித்து கொண்டு பெற்றோர் வீடான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தொப்புலாம்பட்டிக்கு சென்று விட்டார்.
நேற்று இரவில் பிச்சை மற்றும் அவரது 3 பிள்ளைகளும் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் வந்த ஒரு ‘மர்ம’ நபர் வீடு புகுந்து பிச்சையின் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலை துண்டாகி செத்தார். சத்தம் கேட்டு மகன் கார்த்திக் எழுந்து பார்த்தபோது ‘மர்ம’ நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து மனைவி பஞ்சுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் நடந்த அரை மணி நேரத்திலேயே வீட்டுக்கு வந்து விட்டார். இது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது.
மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் முத்து, மேலவளவு சப்–இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வன் ஆகியோர் பிச்சையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு பஞ்சுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பஞ்சுவுக்கும் மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. கள்ளக் காதலனையும் போலீசார் பிடித்துவிட்டனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் பஞ்சு, எங்களுக்குள் கள்ளத் தொடர்பு இருந்தது உண்மை என்றும், நாங்கள் பிச்சையை கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார். எனவே பிச்சையை கொன்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating