காதலனால் ஏமாற்றப்பட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த பெண்கள் கைது
காதலனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள் இரண்டு பேர், கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய போது கைது செய்யப்பட்டனர். திருச்சி பெட்டவாய்த்தலை எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். அவரது மகள் ஷீலா. அதே பகுதியைச் சேர்ந்த ரமேசை இரண்டு ஆண்டாக காதலித்தார். வயல்வெளிகளில் தனிமையில் சந்தித்து டூயட்பாடி உல்லாசமாக இருந்தனர். இதில், கர்ப்பமடைந்த பெண், திருமணம் செய்ய காதலனை வற்புறுத்தினார். உறுதி கூறிய காதலன் கர்ப்பத்தைக் கலைக்க ஏற்பாடு செய்து விட்டு திருமணம் செய்ய மறுத்து விட்டார். ஷீலா போலீசில் புகார் செய்தார். காதலனால் ஏமாற்றப்பட்ட மற்றொரு பெண் ரோசி. திருச்சி அய்யம்பட்டி மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர். அதே பகுதி வீரகுமாரைக் காதலித்தார். திருமணத்துக்கு கேட்ட போது மறுத்து விட்டார். காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் இருவரும் குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் துவக்கினர். மகளிர் போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இது பற்றி ஷீலா கூறியதாவது: ரமேஷின் சகோதரி லதா, டி.ஐ.ஜி., ஆறுமுகத்தின் மனைவி. அவரது நிர்ப்பந்தத்தால் தான் எனது கர்ப்பம் கலைக்கப்பட்டது. முதல்வரிடம் புகார் செய்துள்ளேன். வழக்கில் டி.ஐ.ஜி.,யின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதால், போலீஸ் விசாரணையில் நியாயம் கிடைக்காது. இவ்வாறு ஷீலா கூறினார்.