மதுரை அருகே அரசு பஸ்கள் மோதல்: திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் சாவு
மதுரை அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும், 22 பேர் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி விஜயலட்சுமி (45), காந்திமதி (38) உள்ளிட்ட 10 பேர் மதுரை மாவட்டம், மேலூர் அருகே துக்கவீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு, மீண்டும் மதுரையிலிருந்து திருப்பூர் வழியாக கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் அரசு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தனர். இந்த பஸ்ஸýம், கோவை மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து மதுரைக்கு வந்துகொண்டிருந்த அரசு பஸ்ஸýம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் விஜயட்சுமி, காந்திமதி, கருமாத்தூரைச் சேர்ந்த சின்னக்காளை மகன் முத்தையா உள்ளிட்ட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 2 பெண்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. விபத்துக்குள்ளான பஸ்களின் டிரைவர்கள் ஈரோடைச் சேர்ந்த அப்பாசாமி மற்றும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமதுஅலி ஜின்னா ஆகியோர் பலத்த காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் அப்பாசாமியின் கால் முறிந்தது. ஆட்சியர் நேரில் ஆறுதல்: மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.எஸ். அன்பு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விபத்து நிவாரண நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ஜவஹர் தெரிவித்தார்.