ஜனவரி – 8 இல் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்; முஷாரப் அறிவிப்பு
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப் கடந்த காலங்களைப் போன்று வாக்களிப்பு நடைபெறும் நேரங்களில் இராணுவத்தினர் பணிக்கமர்த்தப்படமாட்டார்களெனவும் தெரிவித்துள்ளார். முஷாரப்பின் வீட்டில் இடம்பெற்ற சிந்து மாகாண சபை உறுப்பினர்களுக்கு பிரியாவிடை வழங்கும் விருந்துபசார நிகழ்விலேயே முஷாரப் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி 8 இல் வாக்கெடுப்பை நடத்துமாறு தான் தேர்தல் ஆணையகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்த முஷாரப் வாக்கெடுப்பு பணிகளுக்கு இராணுவத்தினர் அழைக்கப்படமாட்டார்கள். அக்காலப்பகுதிக்கான பணிகள் பொலிஸாரிடமும் உள்ளூர் அதிகாரிகளிடமுமே ஒப்படைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார். அத்துடன், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை சட்டவிதிகளுக்கமைவாக வெளிப்படையான முறையில் நடத்துவதே தனது நோக்கமெனவும் முஷாரப் தெரிவித்துள்ளார். மேலும், மற்றுமொரு நிகழ்வில் உரையாற்றிய முஷாரப் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளதுடன், எதிர்க்கட்சியினர் தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக கூறுவது தங்களால் தேர்தலில் வெற்றிபெற முடியாதென்ற காரணத்தினாலாகுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுக்களை முஷாரப்புடன் பெனாசிர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பெனாசிர் பதிலளிக்க மறுத்துள்ளதுடன் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான அமைதி நிறைந்த அரசியல் மாற்றமொன்றுக்கான உடன்படிக்கையை முஷாரப்புடன் மேற்கொள்வதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சிறந்ததொரு வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு முஷாரப் இலகுவில் வழங்கமாட்டாரென தாம் கருதியதனாலேயே தான் இம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பெனாசிர் தெரிவித்துள்ளார்.