ஆசிட் வீச்சில் ரஷ்ய இளம்பெண் படுகாயம்: காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்…!!
வாரணாசியில் தங்கியிருந்த ரஷ்ய இளம்பெண் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் தார்யா இந்தியா வந்துள்ளார். அவர் கடந்த 3 நாட்களுக்கு முன் வாரணாசி சென்றார். நகரின் மையப் பகுதியான நந்த நகர் காலனியில் உள்ள ஹரிடே லால் ஸ்ரீவத்ஸவா வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக (வாடகை) தங்கினார். இதே வீட்டில் கடந்த 3 மாதத்திற்கு முன் வந்திருந்த போதும் தங்கி உள்ளார்.
இந்நிலையில், தார்யா தான் தங்கியிருந்த மூன்றாவது மாடியில் அறை பால்கனியில் இன்று காலை படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு உரிமையாளரின் பேரன் சித்தார்த், தார்யாவின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தார்யா, உடனடியாக பனாரஸ் இந்து பல்கலைகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து போலீசில் தார்யா கூறும்போது ‘எனது விசா காலம் முடிவடைந்து விட்டதால் நான் ரஷ்யாவுக்கு திரும்பி செல்ல எண்ணி இருந்தேன். இதில் கோபம் அடைந்த சித்தார்த் நான் பால்கனியில் தூங்கிக் கொண்டிருந்தபோது என் முகத்தில் ஆசிட் வீசினார். நான் அவரை நண்பராக மட்டுமே பார்த்தேன். ஆனால், அவரோ என்னை காதலித்துள்ளார்’ என கூறி உள்ளார்.
இது தொடபாக போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷ்ய இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட விவகாரம் குறித்து புதுடெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. ரஷ்ய அதிகாரிகள் சிலர் ரஷ்யா விரைந்து உள்ளனர்.
இந்தியாவில் திருமணத்திற்கு நிராகரித்துவிட்டால் பெண்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து 2013-ல் ஆசிட் தாக்குதல்கள் தனி குற்றப்பிரிவாக மாற்றி அமைக்கபட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாக நீதிமன்றங்கள் வாக்குறுதி அளித்ததுடன், அரசுகள் ஆசிட் விற்பனையையும் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தன. இருந்தும் ஆசிட் தாக்குதல்கள் குறையவில்லை.
Average Rating