ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கஸ்பரோ உட்பட முக்கியஸ்தர்கள் கைது
முன்னாள் உலக செஸ் சாம்பியனும் ரஷ்யாவின் முக்கிய எதிர்கட்சி உறுப்பினருமான கெரி கஸ்பரோவிற்கு ஐந்து நாட்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பதவி விலகக் கோரி 3000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளைத் தாங்கிய வண்ணம் கஸ்பிரோவின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டின் தேர்தல் ஆணையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர்ந்தபோதே இவர்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரேயாகம் மேற்கொண்டதுடன் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லையென கூறி கஸ்பரோவை கைதும் செய்துள்ளனர். ஆனால், அந்நாட்டு அதிகாரசபை கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்ததே தவிர பேரணி நடத்துவதற்குரிய அனுமதி அவர்களால் பெறப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையகத்தை நெருங்கிய ஆர்ப்பாட்டக் காரர்கள் அதற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைய முற்பட்டபோதே கலகமடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர். எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அந்நாட்டின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, விளாடிமிர் புட்டினே அதில் வெற்றிபெறுவாரென்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்பாரிய பேரணி நடைபெற்றமையும் பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளமையும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, இத்தேர்தலில் போட்டியிடும் இருவரின் பெயரையும் தேர்தல் ஆணையகம் இடைநிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், விளாடிமிர் புட்டின் சட்டத்துக்கு முரணாக தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடுகின்றாரென்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிலமைந்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.