கலசபாக்கம் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 2–ம் வகுப்பு மாணவன் சாவு…!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பெரிய காலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு முனியம்மாள் (வயது10) என்ற மகளும், சஞ்சய் (7) என்ற மகனும் இருந்தனர்.
முனியம்மாள் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் சஞ்சை 2–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சிறுவன் சஞ்சய் இன்று பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலேயே இருந்தான்.
இதனால் செய்யாற்றில் துணி துவைக்க சென்ற தாய் பூங்கோதை மகனை உடன் அழைத்து சென்றார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஆற்றில் மணல் கடத்துவதற்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களும் தெரியாத அளவுக்கு இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.
இந்த ஆபத்தை உணராமல் பூங்கோதை கரையோரம் சஞ்சய்யை விளையாட விட்டு துணி துவைத்து கொண்டிருந்தார். சிறுவன் சஞ்சய் கரையோரம் நின்றபடி தண்ணீரில் குதித்து குதித்து விளையாடினான்.
அப்போது ஆற்றில் மணல் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மணல் சரிந்து விழுந்து சஞ்சய் தண்ணீரில் மூழ்கினான். சிறிது நேரம் கழித்து பூங்கோதை திரும்பி பார்த்த போது விளையாடி கொண்டிருந்த மகன் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்தவர்கள் ஆற்றில் இறங்கி சிறுவனை தேடினர்.
பள்ளத்தில் சிக்கியிருந்த சஞ்சய்யை மயக்கடைந்த நிலையில் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating