கொழும்பில் மழையால் ஒருவர் பலி 4; இளைஞரைக் காணவில்லை..!!
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான மழை பெய்துவரும் நிலையில், கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடும் மழையினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் கிராண்ட்பாஸ் கெத்தாராம விளையாட்டு மைதானப் பகுதியில் உள்ள மெல்வத்த கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு 19 வயதான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் கொழும்பில் கடும் மழை பெய்தது. இதன் போது மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்குண்ட 57 வயதான பெண்ணொருவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அனுலாவதி எனப்படும் குறித்த பெண் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே கிராண்ட்பாஸ் கெத்தாராம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் மெல்வத்த கால்வாயில் விழுந்த பந்தினை எடுக்க முயற்சித்த 19 வயதான இளைஞர் ஒருவரும் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். சம்பவம் இடம்பெறும் போது மழையுடன் கூடிய காலநிலை இருந்துள்ளதுடன் கால்வாயின் நீர் மட்டமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் அபீல்ட் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் நேற்று மாலை 5.00 மணியாகும் போதும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரைத் தேடி பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
Average Rating