பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் 2வது முறையாக பதவியேற்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப் அந்நாட்டின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால் இந்த தீர்ப்பு வருவதற்குள் முஷாரப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை கொண்டு வந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றி தான் வெற்றி பெற்றது குறித்த தீர்ப்பை தனக்கு சாதகமாக அமையுமாறு செய்து கொண்டார். தொடர்ந்து அதிபர் பதவி மற்றும் ராணுவ தளபதி பதவி இரண்டையும் வகித்து வந்தார். இந்நிலையில் முஷாரப் ஒரு பதவியை மட்டும் தான் வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் அவருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன. இதையடுத்து முஷாரப் ராணுவ தளபதி பதவியை விட்டு விலக முடிவு செய்தார். அதன்படி தனது ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப், ஜெனரல் ரஷ்பக் பர்வேஸ் கியானியிடம் ராணுவ தளபதி பதவியை ஒப்படைத்தார்.
இைதயடுத்து முஷாரப் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹமீத் டோகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் நாட்டின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள முஷாரப் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிபராக நீடிப்பார்.
ராணுவத் தளபதி பதவியில்லாமல் வெறும் அதிபராக முஷாரப் பதவியேற்றுள்ள நிலையில் அவரை எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் ராணுவம் கவிழ்க்க வாய்ப்புள்ளது.