ஜனவரியில் ஆரம்பமாகிறது யாழ்.நகரை அழகுபடுத்தல்..!!
ஐந்து வருட துரித திட்டத்தின் கீழ் யாழ்.நகர மையம் புதிய நகராக புதிய பரிமாணமாக அழகுபடுத்தப்படவுள்ளது. அந்த நடவடிக்கை 4 பிரிவுகளாக முன்னெடுக்கப்படவுள்ளது என்று யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கென பல பில்லியன் ரூபாவை செலவிட உலக வங்கி முன்வந்துள்ளது. நவீன யாழ்.நகரத் திட்டம் குறித்து உலக வங்கிக் குழுவினர் வடமாகாண சபை முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்திலும், யாழ். அரச அதிபர் தலைமையிலான உலக வங்கி குழுவின் முதலாவது கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு இந்தத் திட்டம் முழுமை பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் இந்த அபிவிருத்தியை 5 வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் முதலில் நான்கு பிரிவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி முதலாவது திட்டம்,வீதி விசால
அபிவிருத்தி மற்றும் வாகனத்தரிப்பு மற்றும் நிறுத்தம் தொடர்பானது. இரண்டாவது திட்டம் யாழ்.நகர கலாசார மைய அபிவிருத்தி (பல பரிமாணம் கொண்டது.) மூன்றாவது திட்டம், நகர வாய்க்கால், காணி, மலசலகூடம், உட்கட்டுமானம், நவீன உட்கட்டுமானத் தொகுதி அமைத்தல். நான்காவது திட்டம், நிறுவன ரீதியான
அபிவிருத்தி என்பவையாகும்.
இந்தத் திட்ட முன்னகர்வு இடம்பெறும்போது, வீதி விஸ்தரிப்பு, தேவையற்ற கட்டடங்கள் அழிப்பு, பஸ்தரிப்பு நிலையம், வர்த்தகக் கடைத் தொகுதி இடமாற்றம் என்பவையும் வைத்தியசாலை அமைப்பில் மாற்றம் என்பவையும் ஏற்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating