கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை…!!
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது. அதன் கோரத் தாண்டவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிஷங்களில் ஆழிப் பேரலையானது ஏராளமானோர் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது. அதன் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் மறையவில்லை.
லட்சக்கணக்கானோர் பலி: இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேரை இந்த ஆழிப் பேரலை பலி கொண்டுவிட்டது. ஆயிரக்கணக்கானோர் சொந்தங்களையும், உடைமைகளையும் இழந்து பரிதவித்து நின்றனர். தாய், தந்தையரை இழந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதையானார்கள். பல்வேறு நிவாரணப் பணிகளை அரசும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், இன்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் உளவியல் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
இந்தப் பெரும் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகள் இப்போது சுனாமி எச்சரிக்கைக் கருவிகளை நிறுவியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது ஆழிப் பேரலைகள் வந்தாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
Average Rating